education

img

“பேசும் காச்சக்கார அம்மன்”

சீசனுக்கு சீசன் நாம் குற்றாலம், கொடைக்கானல் சென்று வருவதைப்போல நம்மைத் தேடி காய்ச்சல் சீசனுக்குத் தவறாமல் வந்துவிடுகிறது. ஆனால் இன்னமும் நாம் காய்ச்சலைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டபாடில்லை. நமக்கு காய்ச்சல் வந்துவிட்டால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம், எவ்வாறு அதை அணுகுகின்றோம் என்று நம்மைப் பார்த்து நாமே கேள்விகள் கேட்டு விடை காண வேண்டியிருக்கிறது. நம் உடலில் எது வித்தியாசமாக தோன்றினாலும் அது நோயாகத்தான் இருக்கும் என்கிற மனநோய் நம்மில் எல்லோருக்கும் வந்துவிட்டது. இதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. காய்ச்சல் பற்றிய நமது புரிதலை ஒருசில உதாரணங்களோடு நாம் புரிந்து கொள்ள முயலுவோம். காலையில் எழுந்து வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டிற்குத் திரும்புகையில் ஒரே அசதியாக இருக்கும். யாரோ நம்மை உருட்டுக் கட்டையால் அடித்துப் போட்டதைப்போலத் தோன்றும். அப்படித்தானே? சரி இப்போது உங்களிடம் ஒரு கேள்வி. இது நோயா??? இல்லை, என்பதுதான் பதில். வேலையின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சில தசைகளையும், உறுப்புகளையும் மட்டுமே பயன்படுத்துவதால் வருகிற அயர்ச்சிதான் இது. இதனை வேலை செய்யும் விதம், நேரம், இடைவேளை, ஓய்வு என்று நமது வேலையை சீரமைத்துக் கொள்வதன் மூலமாகவே சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் உடல் அசதியாக இருக்கிறது என்று வலி நிவாரண மாத்திரைகளை மருந்துக் கடைகளிலும், ஊசியை மருத்துவமனைகளிலுமாக சென்று போட்டுக்கொள்கிற மக்கள் தான் இப்போது அதிகரித்துவிட்டனர்.

இதையெல்லாம் என்ன சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பது? அதேசமயம் டெங்கு, மலேரியா, காசநோய் போன்ற நம்மை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் படுக்கையில் சேர்த்துவிடும் காய்ச்சல்களுக்கு சிலர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதில்லை. சாவகாசமாக பெட்டிக் கடையில் விற்கிற காய்ச்சல் மாத்திரைகளை வாங்கி வாயில் போட்டு விழுங்கிக் கொண்டு அது முற்றும் வரை காத்திருக்கிறார்கள். அந்த நோய் அதிதீவிரமாகி முற்றிய பின்பு வேகவேகமாக உறவினர்கள் நோயாளியை ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடுராத்திரியில் மருத்துவமனைக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் ஒன்றும் அவதிப்படத் தேவையில்லை. சிலர் உடல் அசதிக்கு என்று தினந்தோறும் நாள் தவறாது மருத்துவமனைக்கு வந்து வலி நிவாரண ஊசி போடுவதும், இன்னும் சிலர் தீவிரமான காய்ச்சலுக்கு கஞ்சியை ஊத்தி குடித்துவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சிகிச்சை ஏதும் பெறாமல் தூங்கி விடுவதுமான வழக்கத்தை கொண்டுள்ளனர். இப்படியாக எதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை கிளிப்பிள்ளை பாடமாக ஒவ்வொருவருக்கும் எடுக்க வேண்டியிருக்கிறது. சரி விசயத்திற்கு வருவோம். காய்ச்சல் என்பது நோயா என்ன? அது ஒரு அறிகுறி மட்டுமே. ஒரு செடி வளருவதற்குப் பின்னே விதையொன்று இருப்பதைப்போல, காய்ச்சல் அறிகுறிகளுக்குப் பின்னே ஏதேனும் ஒரு நோய்க்கான விதை இருக்கலாம். அந்த விஷ விதையை முளையிலேயே கண்டுபிடித்து கிள்ளி எறிவதே மருத்துவர்களின் முக்கியமான வேலையாக இருக்கிறது.

மருத்துவர்கள் எப்படி நோயினை ஆராய்கிறார்கள்?                                                                                                                                                                                                                                                                                                                                                                                         தாவரவியல் அறிவு சொல்வது இதுதான். நீங்கள் உங்கள் தோட்டத்தில் செடிகளை நட்டு வளர்க்கப் போகிறீர்கள் என்றால் சுற்றியுள்ள தோட்டங்களில் என்னென்ன செடிகள் வளருகின்றன என்று பாருங்கள். அடுத்ததாக மண்ணை குனிந்து பார்த்து அதன் நிறம், தன்மை, வளம், ஏனைய உயிர்களின் வளர்ச்சி இவைகளை வைத்து என்ன செடிகள் என்பதைத் தேர்வு செய்து நடுங்கள் என்றே அறிவுறுத்துகிறது. மருத்துவ சிகிச்சையளிப்பதிலும் கிட்டத்தட்ட இதே முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். ஒரு குழந்தைக்குக் காய்ச்சல் என்றால் அந்த குழந்தை எந்த ஊர், அந்த ஊரில் வேறு யாருக்கேனும் அல்லது அந்த குடும்பத்திலே யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா? அந்த ஊரில் ஏதேனும் சீசனுக்கு சீசன் குறிப்பிட்ட காய்ச்சல் ஏதும் வருகிறதா? அந்த ஊரில் எப்பேர்ப்பட்ட கிளைமேட் இருக்கும்? ஊரில் பொது சுகாதாரம் பற்றிய ஏனைய வசதிகள் எப்படி இருக்கிறது? இப்படியான கேள்விகள் வழியே குறிப்பிட்ட காய்ச்சல் வருவதற்கான மூலக் காரணத்தைத்தான் முதலில் ஆராய்வார்கள்.  உதாரணத்திற்கு, ஏழு வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு என்று கூறி அழைத்து வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த குழந்தையின் ஊரிலிருந்து வேறு சிலரும் அதே வயிற்றுப்போக்கால் வந்து சிகிச்சை பெற்றிருந்தால் அதை வைத்து ஒருவேளை அந்த ஊரின் பொதுக்குழாய் குடிநீரில் கிருமி தொற்று காரணமாக நோய் வந்திருக்கலாம் என்று யூகித்துக் கொள்ளலாம். ஒருசமயம் அந்தக் குழந்தை சாப்பிட்ட அதே வீட்டு விழாவிலோ, கடை உணவிலோ ஏனைய ஊர்க்கார்ரகளும் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு வந்திருந்தால் அந்த உணவின் கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.

இப்படி சி.பி.ஐ ஆபிசர் மாதிரி ஒரு நோயினை சமூகத்தின் பார்வையில் வைத்து விசாரித்து அணுகினால் ஒரளவு நோயிற்கான விடையை கண்டுபிடித்துவிட முடியும். இப்படி ஊர்க்கதையெல்லாம் பேசி விசாரித்த பிறகுதான் குழந்தையின் வயது, பாலினம், நோயின் தன்மை, வீரியம், காய்ச்சல் முற்றினால் வரக்கூடிய ஏனைய பிரச்சனைகள் என ஒவ்வொன்றாகக் கேட்டும், ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதித்தும், ரத்தம் மற்றும் சிறுநீரை என ஆய்வு செய்தும் குழந்தையின் காய்ச்சலுக்கான மூலகாரணம் என்ன? அதன் தன்மை இப்போது சாதாரணமானதா/மோசமானதா? அதனை வைத்து ஓய்வு மற்றும் உணவில் சரி செய்ய முடியுமா? அல்லது மாத்திரை-டானிக் ஊசிகள் மூலம் வெளிநோயாளியாகவோ அல்லது உள்நோயாளியாகவோ சேர்க்க வேண்டுமா என்று முடிவு செய்கிறார்கள். இப்படி ஒரு கழுகுப் பார்வை மருத்துவர்களுக்கு மட்டுமல்ல நம் மக்கள் எல்லோருக்குமே வர வேண்டும். நம் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் என்றால் உடனே அது நோய்தான் என்கிற மனநிலைக்கு யாரும் செல்ல வேண்டியதில்லை. நாம் அவர்களை தொட்டுப் பார்த்து காய்ச்சல் எப்படி இருக்கிறது? மருத்துவமனைக்கு இப்போது அழைத்துச் செல்லலாமா? மருத்துவமனையில் காய்ச்சல் வந்தால் என்ன செய்வார்கள்? காய்ச்சலுக்கு ஏற்ப வீட்டளவில் நாம் என்னென்ன உதவிகளை நோயாளிக்குச் செய்யலாம் என்பன போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.